செய்திகள்

மோடியுடன் கூட்டணி சேர்ந்ததால் பாதிக்கப்பட்டேன்- மெகபூபா முப்தி வேதனை

Published On 2018-07-31 05:39 GMT   |   Update On 2018-07-31 08:19 GMT
வாஜ்பாய் ஆட்சிதான் பொற்காலம் என்றும் மோடியுடன் கூட்டணி சேர்ந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் மெகபூபா முப்தி கூறியுள்ளார். #BJP #Modi #MehbubaMufti
ஜம்மு:

காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்தது. அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்ததால் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.

இதனால் மெகபூபா முப்தி முதல்-மந்திரி பதவியை இழந்தார். பா.ஜனதா-மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணியும் முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் மெகபூபா முப்தி ஜம்முவில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி அரசு மற்றும் தற்போதைய பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். மோடி அரசுடன் ஒப்பிடும் போது முந்தைய வாஜ்பாய் அரசு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

அப்போது நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது. இதனால் தான் எனது தந்தை முப்தி முகமது சயீத் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். வாஜ்பாயுடன் எங்கள் கட்சிக்கு நல்ல உறவு இருந்தது.

ஆனால் இப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தது வி‌ஷம் குடித்தது போல் ஆகிவிட்டது. அதனுடன் கூட்டணி சேர்ந்ததால் 2 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டேன்.



காஷ்மீரைப் பொருத்த வரை முப்தி முகமது சயீத் ஆட்சிதான் பொற்காலமாக இருந்தது. அவரது ஆட்சியின் போது காஷ்மீர் நல்ல வளர்ச்சி அடைந்தது. தீவிரவாதிகள் நடவடிக்கையும் கட்டுக்குள் இருந்தது. எல்லையில் அமைதி நிலவியது. சாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததும் வளர்ச்சி தடைபட்டு விட்டது.

இவ்வாறு அவர் பேசினார். #BJP #Modi #MehbubaMufti
Tags:    

Similar News