செய்திகள்

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2018-07-23 22:01 GMT   |   Update On 2018-07-23 22:01 GMT
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் டாடா நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #NationalGreenTribunal #NeutrinoResearch
புதுடெல்லி:

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இந்தநிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், டாடா நிறுவனம் நியூட்ரினோ ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல்துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.



இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு மற்றும் டாடா நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.  #NationalGreenTribunal #NeutrinoResearch #Tamilnews 
Tags:    

Similar News