செய்திகள்

கேரளாவில் கனமழை நீடிப்பு- ஆலப்புழா, குட்டநாட்டில் 6 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

Published On 2018-07-23 06:38 GMT   |   Update On 2018-07-23 06:38 GMT
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஆலப்புழா, குட்டநாட்டில் 6 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களை மீட்டு வர கடற்படையின் உதவியை கோர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #heavyrain #Keralarain
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

ஆலப்புழா, குட்டநாடு, கோட்டயம் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மலை கிராமங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் வசித்த மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

ஆலப்புழா- சங்கனாச்சேரி இடையிலான சாலை வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த 7 நாட்களாக இச்சாலையில் போக்குவரத்து நடைபெறவில்லை.

ஆலப்புழா மற்றும் குட்டநாடு பகுதியில் மட்டும் சுமார் 6 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மழையால் சேதம் அடைந்து இடிந்து விட்டது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

ரேசன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் மழையால் சேதமாகி விட்டது. நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு விநியோகமும் தடைபட்டு உள்ளது.

கோட்டயம் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டை படத்தில் காணலாம்

ஆலப்புழா, குட்டநாடு, கோட்டயம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மாநில வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். மந்திரிகளும் அங்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு வர கடற்படையின் உதவியை கோர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு இதனை தெரிவித்து கடற்படை வீரர்களை நிவாரண பணிக்கு அழைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். #heavyrain #Keralarain
Tags:    

Similar News