செய்திகள்
பார்மலின் மீன் விவகாரம்- கோவா சட்டமன்றம் இண்டாவது நாளாக முடங்கியது
பார்மலின் கலந்த மீன்கள் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக இன்றும் கோவா சட்டசபை முடங்கியது. #GoaAssembly #fishissue
பனாஜி:
மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. கோவாவின் உணவு மற்றும் மருந்து கழகம், பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில் பார்மலின் என்ற ரசாயனம் உள்ளது என உறுதி செய்துள்ளது. இதனை அடுத்து கோவா மாநில அரசு ஜூலை இறுதி வரை வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.
இந்த விவகாரம் கோவா மாநில சட்டசபையில் எதிரொலித்தது. நேற்று இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஐந்து முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் எந்த அலுவலும் நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்றும் பார்மலின் மீன் விவகாரம் சட்டசபையில் எழுப்பப்பட்டது. காலையில் சட்டசபை கூடியதும் பார்மலின் மீன்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதனை சபாநாயகர் ஏற்காததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சபாநாயகர் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டும் உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #GoaAssembly #fishissue