செய்திகள்

பயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்

Published On 2018-07-17 09:51 GMT   |   Update On 2018-07-17 09:51 GMT
கனமழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.#Potholes

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு எடுக்க வேண்டிய மிக முக்கிய முன்னெச்சரிக்கை பணி சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்வதாகும். ஏனென்றால், மழை பெய்த பின்னர் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியிருக்கும் போது பள்ளம், மேடுகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

இப்படி நாடுமுழுவதும் கடந்தாண்டு சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் மட்டும் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3600 ஆகும். உத்தரப்பிரதேசம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 987 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 726 பேரும், ஹரியாவாவில் 522 பேரும் சாலை பள்ளங்களுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு பலியானவர்களை விட 2017-ம் ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.



சாலைகளை செப்பனிடும் பணிகளுக்காக பலநூறு கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கிய பின்னரும் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது வேதனை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. 

கடந்த ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள், வீரர்கள் என மொத்தம் 803 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களை விட சாலை பள்ளத்தினால் பலியானவர்கள் 4 மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், பயங்கரவாத இயக்கங்களே நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். பொதுமக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டங்களை கொண்டுள்ளது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், சாலை பள்ளங்களில் சிக்கி பலியானவர்கள் அனைவரும் சாமானியர்களே, எந்த விஐபி வீட்டுக்கு செல்லும் சாலைகள் பள்ளம், மேடாக உள்ளது எனவும் பலர் குமுறிவருகின்றனர்.
Tags:    

Similar News