செய்திகள்

வாரணாசி தொகுதியில் ரூ.937 கோடி நலத்திட்டங்கள் - பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்

Published On 2018-07-14 14:06 GMT   |   Update On 2018-07-14 14:06 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் மோடி 937 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். #PMmodi # #Rs937croredevelopmentschemes #Varanasidevelopmentschemes
லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசம்கர், தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அசாம்கரில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றிய அவர் பின்னர் தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் 937 கோடி ரூபாய் மதிப்பிலான 33 நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:-

ஜப்பான் பிரதமரை நான் சந்திக்கும் போதெல்லாம் வாரணாசி மக்களாகிய நீங்கள் அவருக்கு அளித்த மகத்தான வரவேற்பை பற்றி பிறரிடம் அவர் பெருமையுடன் குறிப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். பிரான்ஸ் அதிபரை நீங்கள் வரவேற்ற விதத்தை அந்நாட்டு மக்கள் போற்றி வருகின்றனர். இதுதான் வாரணாசியின் கலாசாரம், இதுதான் வாரணாசியின் அன்பு.

முந்தைய ஆட்சி காலங்களில் வாரணாசியில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடக்கவில்லை. மேம்பாட்டு பணிகள் முடக்கப்பட்டிருந்தன. மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் எங்களை ஆதரித்து வாக்களித்த பின்னர், இந்த பகுதி வளர்ச்சிப் பாதையில் நடைபோட ஆரம்பித்தது.

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 200 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய இந்தியாவை படைப்பதற்காக புதிய வாரணாசி உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் ஆன்மா பண்டைக்காலத்து பெருமையுடனும், உடல் நவீனக்கால வசதிகளுடனும் ஜொலிக்கும். வாரணாசியின் அனைத்து மூலைகளிலும் கலாசாரமும், பாரம்பரியமும் செழித்திருக்கும். அதேவேளையில் நவீன காலத்துக்கேற்ற வசதிகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். #PMmodi # #Rs937croredevelopmentschemes  #Varanasidevelopmentschemes
Tags:    

Similar News