செய்திகள்
கோத்ரா கலவரம் குறித்த பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க மத்திய பிரதேசம் கோரிக்கை
மத்திய பிரதேச மாநில 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் கோத்ரா கலவரம் குறித்த பாடத்தை நீக்க வேண்டும் என அம்மாநில மந்திரி மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். #BJP
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் புத்தகத்தில், சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியா என்ற பாடத்தில் பாஜக இந்துத்துவ சித்தாந்தத்தை ஊக்குவித்து வந்ததாகவும், குறிப்பாக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் குறித்தான பாடங்கள் இடம்பெற்றுள்ளன. கலவரம் நடந்த நேரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு பிரதமர் வாஜ்பாய், ராஜ தர்மத்தை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியதாக பாடத்தில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட இந்த புத்தகங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேற்கண்ட பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய பிரதேச கல்வி மந்திரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் பாடங்களில் முறையற்ற முறையில் நுழைக்கப்பட்டதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.