செய்திகள்

எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த பழங்குடியின மாணவர்களுடன் மோடி சந்திப்பு

Published On 2018-06-29 16:58 IST   |   Update On 2018-06-29 16:58:00 IST
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 பழங்குடியின மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பாராட்டினார். #PMModi
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 மாணவர்களால் பயணத்தை முடிக்க முடியவில்லை.

இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் காவல்துறையில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.



இந்நிலையில், எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.  #PMModi
Tags:    

Similar News