செய்திகள்

சுவிஸில் உள்ள கறுப்புப்பணம் குறித்த தகவல்களை 2019-ல் பெற்று விடுவோம் - பியூஷ் கோயல்

Published On 2018-06-29 09:24 GMT   |   Update On 2018-06-29 09:24 GMT
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், 2019 இறுதிக்குள் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #SwissBank
புதுடெல்லி:

இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிசர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. 

கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.



கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், இந்த தரவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல், “2019 நிதியாண்டு இறுதிக்குள் சுவிச்சர்லாந்து நாட்டுக்கு முறைகேடாக பணம் அனுப்பியவர்கள், வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம்” என கூறினார்.

மேலும், இந்தியா - சுவிச்சர்லாந்து அரசுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 2018 ஜனவரி 1-ம் தேதி முதல் நிதியாண்டின் இறுதி வரை எல்லா தகவல்களும் நாள் பெறுவதற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கோயல் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News