செய்திகள்

ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் 6 சிறப்புப்படை போலீசார் பலி

Published On 2018-06-26 21:21 GMT   |   Update On 2018-06-26 21:21 GMT
ஜார்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர்.

ராஞ்சி:

சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை தடுத்து நிறுத்த நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநில போலீசை சேர்ந்த சிறப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அதோடு மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News