செய்திகள்

அமர்நாத் யாத்திரை - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன், பிபின் ராவத் நேரில் ஆய்வு

Published On 2018-06-25 11:52 GMT   |   Update On 2018-06-25 11:52 GMT
அமர்நாத் யாத்திரை இம்மாத இறுதியில் தொடங்குவதால் அசம்பாவிதங்களை தவிற்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். #AmarnathYatra
ஸ்ரீநகர் :

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.

கடந்த வருடம் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே வரும் 28-ம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



மேலும், பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் நோக்கத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மிகுந்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காஷ்மீர் சென்றுள்ள மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன், மாநிலத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அம்மாநில கவர்னர் என்.என்.வோஹ்ராவுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமர்நாத் யாத்திரைக்காக, பல்தால் ராணுவ தளத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர். #AmarnathYatra 
Tags:    

Similar News