செய்திகள்
மத்திய அரசுப்பணியில் இருக்கும் வீரர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரியானா முடிவு
ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றால், அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.
சண்டிகர்:
அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் அம்மாநில விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டது.
விளையாட்டு வீரர்கள், எதிர்க்கட்சிகள் என கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பரிசு வென்றால் அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
ஒரு வீரர் பதக்கம் வெல்லும் போது சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கான மாநில அரசின் பரிசுத்தொகையை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரியானா அரசின் இந்த முடிவுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.