செய்திகள்

மதிய உணவு திட்டத்துக்கு பீகார் முதல்-மந்திரி எதிர்ப்பு

Published On 2018-06-18 02:51 GMT   |   Update On 2018-06-18 02:51 GMT
அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் தேவை இல்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.#NitishKumar
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது மதிய உணவு திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

அவர் பேசும்போது, “அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் தேவை இல்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இத்திட்டங்களால் கல்விக் கோவில்களான பள்ளிக்கூடங்கள் சமையலறைகளாக தரம் குறைக்கப்பட்டு விட்டன. மேலும் மதிய உணவு திட்டத்தால் கல்வியின் தரமும் குறைந்து போய்விட்டது” என்றார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை ஆதரித்து பேசிய அவர் தனது மாநிலமான பீகாருக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “பீகார் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு, ஜார்கண்ட் உருவாக்கப்பட்டபோது, பெரும்பான்மையான வளங்கள் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்றுவிட்டன. இதனால் பீகார் முன்னேற்றம் காணாமல் போய்விட்டது. மனித மேம்பாடு, தனிநபர் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் நிறுவன நிதி ஆகியவற்றில் பீகார் மிகவும் பின்தங்கிவிட்டது. எனவே இதன் அடிப்படையில் எங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும். மேலும் பின்தங்கிய பிராந்திய பகுதிகளுக்கான மானிய நிதியத்தில் இருந்து பீகாருக்கு உடனடியாக ரூ.2,600 கோடியை வழங்கவேண்டும்” என்றார். #NitishKumar
Tags:    

Similar News