செய்திகள்

உ.பி. மழை மற்றும் புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

Published On 2018-06-14 12:14 GMT   |   Update On 2018-06-14 12:14 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. #UPRain #UPDustStorm
லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெருமளவில் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த தொடர் மழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. 

இதற்கிடையே, உ.பி.யின் சில மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்படி கோண்டா, பைசாபாத், சீதாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசியதால் சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

இந்த புயல் மழை தொடர்பான விபத்துக்களில் கோண்டாவில் 3 பேரும், பைசாபாத்தில் ஒருவரும், சீதாப்பூரில் 6 பேரும் என நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கவுஷாம்பியில் 3 பேரும், ஹர்தோய் மற்றும் சித்ரகூட் பகுதிகளில் தலா ஒருவரும் புழுதி புயலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, மழை மற்றும் புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 28 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். #UPRain #UPDustStorm
Tags:    

Similar News