செய்திகள்

சேலம், கூடலூரில் இருந்து ரூ.72 லட்சம் ஹவாலா பணம் கடத்தல் - 3 வாலிபர்கள் கைது

Published On 2018-06-09 06:34 GMT   |   Update On 2018-06-09 06:34 GMT
சேலம், கூடலூரில் இருந்து ரூ.72 லட்சம் ஹவாலா பணம் கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் மதுவிலக்கு அதிகாரி உதயகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சாந்தி சந்திப்பு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாலக்காடு- திருவனந்தபுரத்திற்கு சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சுக்குள் சந்தேக்கப்படும்படி ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது அவரிடம் இல்லை. முறையான காரணமும் அவர் கூறவில்லை. இதனையடுத்து ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த மதுவிலக்கு அதிகாரிகள் பணத்தையும், வாலிபரையும் குழல்மன்னம் போலீசில் ஒப்படைத்தனர்.

குழல்மன்னம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வயநாடு கோட்டத்தரையை சேர்ந்த விபிசின் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் ஏதற்காக பணம் கடத்தினார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோன்று பாலக்காடு மதுவிலக்கு அதிகாரி ரியாஸ் தலைமையில் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது ரூ.60 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மலப்புரம் கண்ணமங்கலத்தை சேர்ந்த அப்துல் சமீது (35), யாஸ்துல் பசாரி (30) ஆகியோர் என்பதும் இவர்கள் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு இந்த பணத்தை கடத்தி வருவதாகவும் கூறினர்.

அவர்கள் 2 பேரையும் பாலக்காடு தெற்கு போலீசார் கைது செய்து ரூ.60 ஹவாலா பணத்தையும் பறிமுதல் செய்தனர். #tamilnews

Tags:    

Similar News