செய்திகள்

கேரளாவில் ஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டாக காதலித்த இளம்பெண்

Published On 2018-06-07 21:44 GMT   |   Update On 2018-06-07 21:44 GMT
ஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் காதலித்த ருசிகர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

இந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், ‘உன்னை காதலிக்கும் ஸ்ரீராம் ஆண் அல்ல; அவர் ஒரு பெண்’ என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. ஸ்ரீராம் என்ற பெயரில் காதலனாக வலம் வந்தவரையும், அவரை காதலித்த இளம்பெண்ணையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து அவர் போலீசில் கூறுகையில், ‘எனக்கு கடன் அதிகமாக இருப்பதால் அதனை அடைக்க வழி தெரியவில்லை. ஆண் போன்று நடித்து ஒரு பெண்ணை திருமணம் செய்தால், அந்த பெண் வரதட்சணையாக கொண்டு வரும் நகையை ஏமாற்றி வாங்கி விற்று கடனை அடைக்க முடிவு செய்தேன். அதற்காக ஸ்ரீராம் என்ற பெயருடன் 7 ஆண்டாக அந்த பெண்ணை காதலிப்பது போல் நடித்து வந்தேன். நான் எதிர்பார்த்தது போன்று திருமணமும் எங்கள் இருவருக்குள் ஏற்பாடாகியது. ஆனால், எப்படியும் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து திருமணத்துக்கு முன்னதாகவே உண்மையை மணப்பெண்ணிடம் தெரியப்படுத்திவிட்டேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக காதலித்த பெண் தரப்பில் புகார் எதுவும் போலீசாரிடம் அளிக்கப்படவில்லை. எனினும் நீண்ட நாட்களாக ஒரு பெண் ஆணாக நடித்து தனியார் நிறுவனத்தில் பணி செய்தது எப்படி? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் ஒருவரை காதலித்து மோசடிக்கு முயன்ற இந்த ருசிகர சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News