செய்திகள்

நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்பை நீக்க கோரிய வழக்கு - மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2018-06-04 09:07 GMT   |   Update On 2018-06-04 09:07 GMT
நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்திருந்த நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NEETissue #upperagelimit
புதுடெல்லி:

மருத்துவ படிப்புக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் அடிப்படையில் நீட் தேர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையில் நாடு முழுவதும் மாணவர்கள் வேறு வழியின்றி நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர்.

நீட் தேர்வில் அதிகமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதன்மூலம் சிரமத்தை சந்தித்தனர். மேலும், தேர்வறைக்கு செல்லும் போது நடைபெறும் பலகட்ட சோதனைகளும் மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது.

நீட் தேர்வுக்கு தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசோ அதனை கண்டுகொள்ளாமல் வருடந்தோறும் தேர்வை தவறாமல் நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே இன்று வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்தது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஎஸ்சியின் அறிவிப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பலர் தொடர்ந்த பல்வேறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. மேலும், இதுதொடர்பாக ஜூலை 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #NEETissue #upperagelimit
Tags:    

Similar News