செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்வு

Published On 2018-05-25 07:48 GMT   |   Update On 2018-05-25 07:48 GMT
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #KarnatakaAssembly #KarnatakaSpeaker
பெங்களூரு:

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.க.வை முதலில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் அவரால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால், பதவி விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.  

விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம்.



இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக சட்டப்பேரவை இன்று கூடியது. முதலில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் ரமேஷ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. சார்பில் சுரேஷ்குமார் நிறுத்தப்பட்டிருந்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் பா.ஜ.க தனது வேட்பாளரை திரும்ப பெற்றது. இதனையடுத்து சபாநாயகராக ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் பதவியேற்றதையடுத்து மாலை 3.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. #KarnatakaAssembly #KarnatakaSpeaker
Tags:    

Similar News