செய்திகள்

தொடர் சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் மும்பை மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-05-23 12:43 GMT   |   Update On 2018-05-23 12:43 GMT
பீகார் முன்னாள் முதல் மந்திரியான லாலு பிரசாத் யாதவ் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டார். #LaluPrasadYadav

மும்பை:

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல் மந்திரியாக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

உடல் நிலை மோசமடைந்ததால் பாட்னா இந்திராகாந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு ஒவ்வாமை, மயக்கம் மற்றும் மூச்சுதிணறல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு சிரமப்படும் லாலு அடுத்தகட்ட சிகிச்சைக்காக நேற்று நள்ளிரவு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருடன் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பார்தி ஆகியோரும் வந்துள்ளனர்.

ஏற்கனவே, லாலுவுக்கு கடந்த 2014-ம் ஆண்டில் மும்பை புறநகர் பகுதியான பந்த்ரா குர்லா எனும் இடத்தில் அமைந்துள்ள பிரபல இதயவியல் மருத்துவமனையில் இரு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. 

அதே மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அறுவை சிகிச்சை நிபுணர், முட நீக்கியல் துறை நிபுணர், நீரிழிவு நோய் துறை நிபுணர் மற்றும் இதயவியல் நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. #LaluPrasadYadav
Tags:    

Similar News