செய்திகள்

கோவாவில் நாங்களே தனிபெரும் கட்சி.. ஆட்சியமைக்க அழைக்கவும் - கவர்னரை சந்திக்க காங். முடிவு

Published On 2018-05-17 10:44 GMT   |   Update On 2018-05-17 10:44 GMT
கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில், எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், அதற்கு பதிலடியாக கோவா காங்கிரஸ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. #KarnatakaCMRace #GoaCongress
பணாஜி:

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்று கூறி பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் செல்ல குமார் மற்ற கட்சி தலைவர்களுடன் நாளை அம்மாநில கவர்னரை சந்திக்க உள்ளார்.

அப்படி ஆட்சியமைக்க அழைக்காத பட்சத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் மாளிகையில் தர்ணா நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

40 இடங்கள் கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17, பாஜக 13, மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் வென்றது. சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News