செய்திகள்

கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை எடியூரப்பா அரசு நிறைவேற்றும் - அமித் ஷா

Published On 2018-05-17 10:04 GMT   |   Update On 2018-05-17 10:04 GMT
கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு நிறைவேற்றும் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #Amitsha
புதுடெல்லி:

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திடீர் திருப்பமாக எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பதிவிட்டுள்ளதாவது :-


கர்நாடகா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள். எடியூரப்பா முதல்வரானதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஊழல் மற்றும் பிரிவினை அரசியலை எதிர்த்து வாக்களித்த அனைத்து கன்னடர்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசு பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கர்நாடகா மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #Amitsha
Tags:    

Similar News