செய்திகள்

இரட்டை இலை சின்னம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் தொடக்கம்

Published On 2018-05-15 23:33 GMT   |   Update On 2018-05-15 23:33 GMT
இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது. #TwoLeavesSymbol #DelhiHighCourt
புதுடெல்லி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



டி.டி.வி.தினகரன் தரப்பில் கோர்ட்டில் நேற்று ஆஜரான அவருடைய வக்கீல் மீனாட்சி அரோரா தன்னுடைய வாதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற வழக்கு தேர்தல் கமிஷனில் நடைபெற்று வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களில் பல போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவர்கள் மீது தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் கமிஷனின் இந்த அணுகுமுறை சட்டவிரோதமானது என்றார். 7 நாட்கள் நடந்த இவர்களின் வாதம் நிறைவடைந்தது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தை தொடங்கினார். வாதம் தொடங்கிய சிறிது நேரத்தில், இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து வாதம் நடைபெறும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

வழக்கு விசாரணையின் போது அமைச்சர் சி.வி.சண்முகம் கோர்ட்டில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து விசாரணையை கவனித்து கொண்டிருந்தார்.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருடைய ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு கோரியதை ஏற்று, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பதிவு மீதான இறுதி வாதம் ஜூலை 17-ந் தேதி என்று அறிவித்த நீதிபதி, அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.  #TwoLeavesSymbol #DelhiHighCourt
Tags:    

Similar News