செய்திகள்

ஜெருசலேமில் தூதரகம் திறப்புக்கு எதிர்ப்பு - அமெரிக்காவுக்கான தூதர் நாடு திரும்ப பாலஸ்தீனம் உத்தரவு

Published On 2018-05-16 02:04 IST   |   Update On 2018-05-16 02:04:00 IST
ஜெருசலேம் நகரில் அமெரிக்கா தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கான தூதரை திரும்பப்பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. #Gaza #USEmbassyJerusalem #Palestinianenvoyrecalled

ரமல்லா:

இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 59 பேர் உயிரிழந்தனர். 1,200  பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 110 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 



இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதரை திரும்பப்பெறுவதாக பாலஸ்தீன அதிபர் மொகமது அப்பாஸ் அறிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதர் ஹுசாம் சோம்லாட் பாலஸ்தீனத்துக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaza #USEmbassyJerusalem #Palestinianenvoyrecalled
Tags:    

Similar News