செய்திகள்

அசாமில் காவல் நிலையம் அருகே ஐ.எஸ். கொடிகள் கிடந்ததால் பரபரப்பு

Published On 2018-05-03 04:16 GMT   |   Update On 2018-05-03 04:16 GMT
அசாமில் புறக்காவல் நிலையம் அருகே ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொடி போன்ற தோற்றத்தில் கொடிகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #AssamISFlag
திஸ்பூர்:

உலக நாடுகளின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, தனது இயக்கத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்களை சேர்த்து வருகிறது. இந்தியாவில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், அசாம் மாநிலம் கோல்புரா நகரில் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம் உள்ள ஒரு மரத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொடிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டன. புறக்காவல் நிலையம் அருகே  கண்டெடுக்கப்பட்ட அந்த கொடிகளில் ஐ.எஸ். என்றும், வடகிழக்கு மாநிலங்களைக் குறிக்கும் வகையில் என்.இ. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு அமிதாப் சின்கா கூறுகையில், ‘ஐ.எஸ். கொடியை ஒத்திருக்கவில்லை. நாங்கள் கைப்பற்றியது கருப்புக் கொடிகள்தான். ஐ.எஸ். என்று கையால் வரையப்பட்டுள்ளது. உருது அல்லது அரபு எழுத்துக்கள் அதில் காணப்படுகின்றன. எனினும், இது தவறான செயல். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க விசாரணையை தொடங்கி உள்ளோம்” என்றார்.

காவல் சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். போன்ற கொடிகள் கிடந்தது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. #AssamISFlag
Tags:    

Similar News