செய்திகள்
இலவச கியாஸ் இணைப்புக்கு கடன் வசூலிப்பது ஒத்திவைப்பு
இலவச கியாஸ் இணைப்பு பெற்றவர்களிடம் ஏப்ரல் 1-ந் தேதி முதல், 6 சிலிண்டர்களுக்கு கடன் வசூலிப்பது ஒத்திவைக்கப்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
மிகவும் பின்தங்கிய ஏழை மக்களுக்கு கியாஸ் இணைப்பு வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் எரிவாயு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 3.6 கோடி மக்கள் இந்த வகையில் இலவச கியாஸ் இணைப்பை பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின்படி ரூ.1,600 மானியத்தில் கியாஸ் இணைப்பை அரசு வழங்கும். கியாஸ் அடுப்பு, சிலிண்டருக்கு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டும். இதற்காக இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி.) வட்டியில்லா கடன் வழங்குகிறது.
இந்நிலையில் ஐ.ஓ.சி. திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இலவச கியாஸ் இணைப்பு பெற்றவர்களிடம் ஏப்ரல் 1-ந் தேதி முதல், 6 சிலிண்டர்களுக்கு கடன் வசூலிப்பது ஒத்திவைக்கப்படுகிறது. புதிய இணைப்பு பெறுபவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறியுள்ளது.
கர்நாடகா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்தலும், சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதை மனதில் வைத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.