செய்திகள்

பா.ஜ.க. முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

Published On 2018-03-01 10:46 GMT   |   Update On 2018-03-01 10:46 GMT
பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்-மந்திரிகள் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
புதுடெல்லி:

டெல்லியில் தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று பா.ஜ.க. முதல்- மந்திரிகள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது முதல்-மந்திரிகள் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அவர் பேசியதாவது:-

உங்கள் மாநிலங்களில் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள். ஏழை-எளியவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை முடுக்கி விடுங்கள்.

நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அந்த இலக்கை தவறாமல் பூர்த்தி செய்தல் வேண்டும். குறிப்பாக சுகாதார பாதுகாப்பு திட்டத்தை முனைந்து செயல்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு பா.ஜ.க. ஆளும் சில பெரிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலை சந்திக்க இப்போதே நீங்கள் தயாராக வேண்டும்.

பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதனால் செலவு கணிசமாக குறையும்.

பாராளுமன்றத்துக்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணம் ஏற்படுகிறது.

எனவே பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Tamilnews
Tags:    

Similar News