செய்திகள்

ஏமனில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் இந்தியா வந்தடைந்தார்

Published On 2017-09-28 03:01 GMT   |   Update On 2017-09-28 03:01 GMT
ஏமன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு 18 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட கேரள பாதிரியார் தாமஸ் உழுநாளில் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.
புதுடெல்லி:

கேரளாவை சேர்ந்தவர் பாதிரியார் தாமஸ் உழுநாளில். இவர் ஏமன் நாட்டில் செயல்படும் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஆசிரமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் பாதிரியார் தாமஸ் உழுநாளிலை கடத்திச் சென்றனர். அதன் பிறகு அவரது கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. சில மாதங்களுக்கு பிறகு அவரது புகைப்படங்களை தீவிரவாதிகள் வெளியிட்ட பிறகே அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து பாதிரியார் தாமஸ் உழு நாளிலை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 18 மாத நடவடிக்கைக்கு பிறகு கடந்த 11-ந்தேதி அவரை தீவிரவாதிகள் விடுவித்தனர். இதனையடுத்து, அவர் நேராக வாடிகன் நகருக்கு சென்றார். அங்கு போப் ஆண்டவரை சந்தித்து தாமஸ் பேசினார்.

இந்நிலையில், இன்று காலை அவர் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை கத்தோலிக்க திருச்சபை நிர்வாகிகள் வரவேற்றனர். “மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த நாள் சாத்தியமாவதற்கு கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எனக்காக தனது சொந்த வழியில் பணிபுரிந்த அனைவரும், நான் நன்றியுள்ளவர்களாக இருக்கிறேன்” என்று தாமஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாதிரியார் தாமஸ் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News