செய்திகள்

அருண்ஜெட்லி அவதூறு வழக்கு: கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-05-23 10:11 GMT   |   Update On 2017-05-23 10:11 GMT
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் பதில் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி கிரிக்கெட் வாரியத்தில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி முறைகேட்டில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் 5 ஆம் ஆத்மி தலைவர்கள் மீது அருண் ஜெட்லி, ரூ.10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த 17-ந்தேதி, டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது அவருக்கும், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் வக்கீல் ராம்ஜெத்மலானிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குறுக்கு விசாரணையின்போது அருண் ஜெட்லியை தரக்குறைவாக ராம்ஜெத்மலானி விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறி கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தன்னை அவதூறாகப் பேசியதற்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடும்படி ஜெட்லி கூறியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அருண் ஜெட்லியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து பதில் அளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
Tags:    

Similar News