செய்திகள்

டெல்லியில் இளம் பெண்ணை காரில் கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது

Published On 2016-12-16 18:31 GMT   |   Update On 2016-12-16 18:31 GMT
டெல்லியில் இளம் பெண்ணை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
புதுடெல்லி:

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் வேலை தேடி டெல்லிக்கு வந்தார். மோதி பாக் பகுதிக்கு வந்த அவர், பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது உள்துறை அமைச்சகத்தின் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட கார் ஒன்று அவர் அருகே வந்து நின்றது . காரை ஓட்டி வந்த நபர் இந்த இளம்பெண்ணிடம் அவரது வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அவரை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

சிறிது நேரத்துக்கு பின் அந்த நபர் காரை ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினார். பின்னர் அவர் அந்த இளம் பெண்ணை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த நபரிடம் இருந்து தப்பி ஓடிய இளம் பெண் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார். போலீசார் அந்த பெண்ணை தெற்கு பகுதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை கற்பழித்த உத்தரபிரதேச மாநிலம் இட்டா நகரை சேர்ந்த அவினேஸ் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த கார் மத்திய தொழில் பாதுகாப்புபடை அதிகாரி ஒருவரின் மகனுக்கு சொந்தமானது என்பதும், அவினேஸ் அவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அந்த காரில் உள்துறை அமைச்சகத்தின் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் நினைவுகூரத்தக்கது. 

Similar News