செய்திகள்

வருவாய்த்துறை அதிகாரிகள் போல் பேசி 200 கால்சென்டர்கள் பணமோசடி: தானே போலீஸ் கமிஷனர் தகவல்

Published On 2016-10-30 02:05 IST   |   Update On 2016-10-30 02:06:00 IST
அமெரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போல பேசி 200 கால்சென்டர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தானே போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
தானே:

அமெரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போல பேசி 200 கால்சென்டர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தானே போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

தானே மிரா ரோட்டில் போலி கால்சென்டர்கள் நடத்தி அமெரிக்க பிரஜைகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்நாட்டு வருவாய் அதிகாரிகள் போல் பேசி, ரூ.500 கோடி வரையில் மோசடி அரங்கேறியது. இதில் தொடர்புடைய 70–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சாகர் தாக்கர் வளைகுடா நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்.

விசாரணையில், அவரை பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது. சாகர் தாக்கர் வருவாய்த்துறை அதிகாரிகள் போல் மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளை சேர்ந்தவர்களிடம் மேலும் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.

போலி கால்சென்டர்கள் மூலம் வெளிநாட்டில் சில குறிப்பிட்ட மருந்துபொருட்களை பயன்படுத்துபவர்களின் விவரங்களை சட்டவிரோதமாக தெரிந்துகொண்டு, அவர்களுக்கு போன் செய்து தேவையான மருந்து பொருட்களை தருவதாகவும் பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல கடன் தருவதாகவும் கூறி வெளிநாட்டினரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 200 கால்சென்டர்கள் அமைத்து வருவாய் அதிகாரி போல பேசி அமெரிக்கர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கொல்கத்தா, குர்காவ் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு மோசடியை அரங்கேற்றி உள்ளனர். தற்போது அங்குள்ள கால்சென்டர்களை இழுத்து மூடிவிட்டனர்.

மேற்கண்ட தகவலை தானே போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்தார்.  

Similar News