செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் கலவரம் - இருவர் பலி, அலுவலங்களுக்கு தீ வைப்பு

Published On 2016-04-25 05:36 IST   |   Update On 2016-04-25 05:36:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் இருபிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அலிகார்:

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். நேற்று முன் தினம் மாலை இங்கு மாணவர்களிடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

ஒரு பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழக அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினார்கள். அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் அலுவலகம் பயங்கரமாக பற்றி எரிந்தது. மாணவர்கள் ஜீப் மற்றும் சில இருசக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர். உடனே தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர்.

உடனே போலீசார் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் முன்னாள் மாணவர் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். மேலும் மாணவர் அல்லாத ஒருவர் பலத்த காயங்களுக்கு பிறகு உயிரிழந்தார்.

இந்த கலவரத்தால் அலிகாரில் பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பல்கலைக் கழகத்தின் மும்தாஜ் ஹாஸ்டலில் உள்ள ஒரு மாணவர் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் தொடங்கியதாக அலிகார் மூத்த காவல்துறை அதிகாரி கோவிந்த் அகர்வால் தெரிவித்தார்.

நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அலிகார் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி ராகட் அபரர் கூறினார்.

போலீசார் 8 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலும் வெளியாட்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்.

Similar News