அரியானா கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு
- அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
- பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களை சேகரித்தனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம்தான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. கங்காராம் புனியா கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்ததாக வந்த தகவலின்பேரில் எங்கள் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம், விவரத்தைக் கேட்டு அறிந்தோம். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கள்ளச்சாராயம் தொடர்பாக பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது 308, 302, 120-B போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வீடுகளில் காலியான மது பாட்டில்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்நிலையில், அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.