இந்தியா

பேருந்து கவிழ்ந்து விபத்து- டெல்லி பல்கலை. மாணவி உயிரிழப்பு, 40 பேர் காயம்

Published On 2023-03-03 21:33 IST   |   Update On 2023-03-03 21:33:00 IST
  • சண்டிகர்-மணாலி சாலையில் சென்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
  • டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிலாஸ்பூர்:

டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கமலா நேரு கல்லூரி மாணவிகள் இமாச்சல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா சென்றனர். சுமார் 35 மாணவிகள், 6 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 44 பேர் பேருந்தில் பயணித்தனர். அவர்களின் பேருந்து பிலாஸ்பூர் மாவட்டத்தில் இன்று விபத்துக்குள்ளானது.

சண்டிகர்-மணாலி சாலையில் சென்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவி உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பிலாஸ்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேருந்தை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாக டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்ததும் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News