செய்திகள்
அமைச்சர் சிவி சண்முகம்

எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. ஆட்சி கவிழாது- சி.வி.சண்முகம் பேட்டி

Published On 2019-06-30 23:06 GMT   |   Update On 2019-06-30 23:06 GMT
எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. ஆட்சி கவிழாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம்:

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், விரைவில் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என்று கூறி வருகிறார். எந்த சூழ்நிலையிலும், எப்போதும் இந்த ஆட்சி கவிழாது. எதிர்க்கட்சி தலைவர் என்றால் தனது தகுதியை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். முதல்-அமைச்சரை ஸ்டாலின் ஒருமையில் பேசி வருகிறார். இது நியாயமா?

அ.தி.மு.க.வினரை கைது செய்வோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கூட்டுறவு வங்கியில் நகைக் கடன், மகளிர் சுய உதவிகுழுக்களுக்கான கடன் என ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கூறியுள்ளார். மேலும் சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் யார் கைது ஆவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

திண்டிவனம் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டில் கொள்ளிடம்- திண்டிவனம் கூட்டு குடிநீர் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். அந்த திட்டப் பணிகள் செயல்வடிவம் பெற்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News