வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மீண்டும் சோதனை
வேலூர்:
தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க வேலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
காட்பாடியில் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் 3 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பின்னர் பறக்கும் படையினர் சோதனைப்பணியை மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 39 பறக்கும் படையினர் மீண்டும் இன்று முதல் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு போல ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லபடும் பணம் பொருட்கள் பறிமுதல் செய்யபடும். இந்த சோதனை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அமலில் இருக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையால் வியாபாரிகள் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் அதற்காக தான் இந்த வாகன சோதனை நடத்தப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 24 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் சோதனை செய்து வருகின்றனர். #LokSabhaElections2019