பறக்கும் படை சோதனையில் டாஸ்மாக் வசூல் ரூ.4½ லட்சம் பறிமுதல்
போரூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், பணம்-பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.கே.நகர் பி.டி. ராஜன் சாலை அண்ணா மெயின் ரோடு சந்திப்பில் நேற்று நள்ளிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கம் இருந்தது. உடனடியாக பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து உதவி தேர்தல் அலுவலர் பிரகதீஷ் ஈஸ்வரி விசாரணை நடத்தினார். காரில் இருந்த 2 பேரும் டாஸ்மாக் ஊழியர்கள் என்பதும், விருகம்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள டாஸ்மாக் வசூல் பணத்தை கட்டுவதற்காக காரில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் உரிய ஆவணங்கள் கொண்டு வந்தனர். அனைத்தையும் சரி பார்த்த பின்னர் பணத்தை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.