நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
- பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
- இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தனது 101-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார். சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்த நல்லகண்ணு எளிமையின் சிகரமாக விளங்கியவர் ஆவார்.
பணம், பொருள் என எதற்கும் ஆசைப்படாமல் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து மிகவும் சாதாரணமாக எளிய வாழ்க்கையை வாழ்ந்துள்ள நல்லகண்ணு அனைவருக்கும் முன்னுதாரணமாகவே போற்றப்பட்டு வருகிறார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு முதுமை காரணமாக உயிர் இழந்ததை தொடர்ந்து தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நல்லகண்ணு உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய்யும் நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நல்லகண்ணுவை பற்றி உருக்கமான கருத்துக்களையும் தெரிவித்தார்.
கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சத்யராஜ், நாசர், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், திரைப்பட இயக்குநர்கள் ரவிக்குமார், வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் திரை உலகை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ எம்.பி., தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் இன்று நல்ல கண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது வைகோ நல்ல கண்ணுவின் புகழை போற்றும் வகையில் கைகளை உயர்த்தி கோஷங்களையும் எழுப்பி கண்ணீர் வடித்தார். இதனை தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நல்லகண்ணு தனது உடலை ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் உயிர் இழந்தவுடன் நேற்று உடனடியாக பதப்படுத்தப்பட்டது. இதன் பிறகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணி வரையில் நல்லகண்ணு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக, 'வீர வணக்கம் வீர வணக்கம் ! வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்! தகைசால் தமிழருக்குச் செவ்வணக்கம்!' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட மற்றவர்கள் அதனை கூறினர். இதன் பிறகு நல்லகண்ணுவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊர்வலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியை சென்றடைகிறது.
பின்னர் முறைப்படி நல்லகண்ணுவின் உடல் ஆஸ்பத்திரி தலைமை நிர்வாகிகளிடம் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.