செய்திகள்

குஷ்புவுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது - செல்லூர் ராஜூ

Published On 2019-04-08 04:10 GMT   |   Update On 2019-04-08 04:10 GMT
குஷ்புவுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #SellurRaju #LokSabhaElections2019

மதுரை:

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தமிழகத்தின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் உதவியோடு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஆனால் நாங்கள் மத்திய அரசுக்கு அடிமைகளாக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். நாங்கள் மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை பெற்று தருகிறோம்.

ஆனால் மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைந்தபோது தி.மு.க. காங்கிரசுக்கு அடிமையாக இருந்து தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்துவிட்டது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள்.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வருகிறார். கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் 5 பவுன் நகை வரை அடகு வைத்து விவசாய கடன் பெற்றவர்களின் கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும் என கூறுகிறார்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி வரை நகைக்கடன் உள்ளது. தனியார் வங்கிகளையும் சேர்த்தால் ரூ.1 லட்சம் கோடி வரை இருக்கும். இதை எப்படி தள்ளுபடி செய்ய முடியும்.

தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை நல்லமுறையில் திருப்பி செலுத்தி வருகிறார்கள். எனவே எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். தி.மு.க. இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது.

மத்திய மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது தமிழ்நாட்டிற்கும், அவரை தேர்ந்தெடுத்த சிவகங்கை தொகுதிக்கும் எந்த நன்மையும் செய்ததில்லை. தற்போது போலி தேர்தல் அறிக்கை தயாரித்து அதனை வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

தற்போது நடிகர்-நடிகைகளின் பிரசாரத்திற்கு கூட்டம் கூடுகிறது. அதே போல்தான் குஷ்புக்கும் கூட்டம் கூடுகிறது. குஷ்புவுக்கு ஒரு காலத்தில் கோவில் கட்டினார்கள். தற்போது அவருக்கு வயதாகி விட்டது. நடிகர்-நடிகைகளை பார்க்க கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறிவிடாது.

தெர்மாகோல் வி‌ஷயத்தில் என்ஜினீயர்கள் செய்த தவறால் தெர்மாகோல் ராஜூ என தற்போது ஊடகங்களில் என்னை குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #SellurRaju #LokSabhaElections2019

Tags:    

Similar News