மதுரவாயலில் சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.78 லட்சம் பறிமுதல்
போரூர்:
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு மதுரவாயல் பைபாஸ் சாலை அருகில் உள்ள ஓடமாநகரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் கட்டுகட்டாக பணம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் காரில் அந்த வழியாக வந்த 4பேரிடம் விசாரணை நடத்தியதில் காரில் ரூ. 78 லட்சம் பணம் உள்ளதாகவும் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் காருடன் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் ஆலப்பாக்கம் தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்று சீல் வைத்தனர். பின்னர் ரூ.78 லட்சம் பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019