என் அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்தக்கூடாது- நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் உத்தரவு
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியவர் அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கையும், பூத் கமிட்டிகளும் அமைக்கப்பட்ட நிலையில் ரஜினி பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் ரஜினி விடுத்த அறிக்கையில் ‘சட்டமன்றமே நமது இலக்கு. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. நதி நீர் பிரச்சினை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று கூறி இருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இணைந்ததாக கூறப்பட்டது.
ரஜினி மன்றத்தில் இருந்து விலகிய அவர் கிருஷ்ணகிரி தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனை கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளரும் பேட்டியாக அளித்தார்.
இந்நிலையில் இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. அதில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணவேண்டும் என உறுப்பினர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. மேலும் மக்கள் மன்ற தலைவரின் அறிவிப்பின்றி எந்த கூட்டமோ, போராட்டமோ நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #rajinikanth #rajinikanthpolitics