உள்ளூர் செய்திகள்

காதலியின் நெருக்கமான புகைப்படங்களை அனுப்பி மிரட்டிய வாலிபர்- போலீசார் விசாரணை

Published On 2023-08-02 15:55 IST   |   Update On 2023-08-02 15:55:00 IST
  • 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம்.
  • நான் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தேன்.

கோவை:

கோவை அருகே அன்னூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன். அப்போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த 26 வயது வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம். அப்போது நாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அந்த வாலிபர் அவரது செல்போன் எடுத்தார்.

இந்த நிலையில் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தேன்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாங்கள் காதலிக்கும்போது நெருக்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் எனது தந்தை மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.

மேலும் நான் கொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். இழப்பீடாக ரூ.4 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டுகிறார்.

கடந்த 12-ந் தேதி இரவு எனது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர் வீட்டில் உள்ள சுவரின் இதுதான் கடைசி எச்சரிக்கை என்று எழுதி விட்டு சென்றுள்ளார்.

சம்பவத்தன்று எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர் எனது அண்ணனிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் குடும்பத்தில் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News