உள்ளூர் செய்திகள்

திருப்போரூர் அருகே தடை செய்யப்பட்ட கடல் புழு கடத்தல்- வாலிபர் கைது

Published On 2023-04-12 14:11 IST   |   Update On 2023-04-12 14:11:00 IST
  • காரில் இருந்த கோவளம் மாதா கோயில் தெருவை சேர்ந்த வேம்புலி என்வரை போலீசார் கைது செய்தனர்.
  • சுமார் 25 கிலோ கடல் புழுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்போரூர்:

கோவளத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கூவத்தூர் பகுதிக்கு தடை செய்யப்பட்ட உவர் நீர் கடல் புழுக்கள் கடத்தப்படுவதாக திருப்போரூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருப்போரூர் வனச்சரகர் கல்யாண் தலைமையில் அதிகாரிகள் குமரேசன், பெருமாள் உள்ளிட்டோர் கிழக்கு கடற்கரைச் சாலை கோவளம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட உவர் நீர் கடல் புழுக்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து காரில் இருந்த கோவளம் மாதா கோயில் தெருவை சேர்ந்த வேம்புலி என்வரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி அவரது வீட்டில் சோதனை செய்தபோது குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிவப்பு உவர் நீர் கடல் புழுக்களை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் சுமார் 25 கிலோ கடல் புழுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

தடை செய்யப்பட்ட இந்த வகையான உவர் நீர் கடல் புழுக்கள் கடற்பகுதியை ஒட்டி உள்ள முகத்துவாரம், கழிவேலி பகுதிகளில் அதிக அளவில் காணப்படும். மேலும் இறால் வளர்க்கும் நபர்கள் இதுபோன்ற உவர்நீர் கடல் புழுக்களை இறாலுக்கு கொடுப்பதினால் இறாலின் எடை அதிகமாகி அதை வெளிநாட்டிற்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட கடல் புழுக்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News