பீடி புகைத்துக் கொண்டே பைக்குக்கு பெட்ரோல் ஊற்றிய வாலிபர் தீயில் கருகி பலி
- ஒரு கையில் பீடியை பிடித்தபடியே மற்றொரு கையில் இருந்த பெட்ரோலை பைக்கில் ஊற்றும் போது திடீரென தீப்பிடித்தது.
- உடம்பில் தீ பிடித்து உடல் கருகி பலத்த காயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 38). இவருக்கு பிரபா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தும்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மீண்டும் தனது வீட்டுக்கு செல்ல முயன்ற போது பைக்கில் பெட்ரோல் இல்லை. இதனைத் தொடர்ந்து ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். ஒரு கையில் பீடியை பிடித்தபடியே மற்றொரு கையில் இருந்த பெட்ரோலை பைக்கில் ஊற்றினார்.
அப்போது திடீரென அவரது உடம்பில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.