உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வத்தலக்குண்டு தொழிலாளி கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-ம் நாளாக போராட்டம்

Published On 2023-10-14 07:11 GMT   |   Update On 2023-10-14 07:11 GMT
  • கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பழைய வத்தலக்குண்டு பகுதியிலும், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த கட்டிடதொழிலாளி பாண்டியராஜன்(34). இவர் நேற்றுமுன்தினம் இரவு திண்டுக்கல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் பழைய வத்தலக்குண்டு பகுதியிலும், வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு அடுத்தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்து கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின்பேரில் மறியலை கைவிட்டனர். இருந்தபோதும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என இன்று 2-ம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும் அவரது உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாநிதி, கண்ணாகாந்தி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் குற்றவா ளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பாண்டியராஜன் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது தொடர்பில் இருந்தவர்கள் யார் என தெரியவில்லை. வேலைக்கு சென்ற இடத்தில் பழகி வந்த 3 பேர் ஒன்றாக சேர்ந்து டாஸ்மாக் கடைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பாண்டியராஜனுடன் சென்றவர்கள் யார் என 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News