உள்ளூர் செய்திகள்

காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் தற்கொலை: இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Published On 2025-04-10 13:35 IST   |   Update On 2025-04-10 13:35:00 IST
  • மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
  • பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூா்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் தினேஷ் (வயது 32).

இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, இவரை அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.

பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் உடனே விடுவிக்க வேண்டும் எனக் கூறி அவரது தங்கைகள் மேனகா (31), கீர்த்திகா (29) போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர்களை போலீசார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மேனகா , கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் துணை போலீஸ் பிரண்டு சோமசுந்தரம் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தொடர்ந்து இன்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் திரண்டு உள்ளனர். பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வழக்கை முறையாக விசாரிக்காத நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து இன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News