ஆலங்குளம் பஸ் நிலையத்தில் சேதமடைந்து கிடக்கும் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள் கோரிக்கை
- ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
- கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் பயன்பாட்டிற்கு கட்டண கழிப்பறை ஒன்றும், கட்டணமில்லா கழிப்பறை ஒன்றும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கட்டண கழிப்பறை மூடப்பட்டு விட்டது.
இதனால் பயணிகள் இலவச கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது. மேலும் சிறுநீர் கழிக்குமிடத்தில் உள்ள கோப்பைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். பேரூராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.