உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே வனத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்டு யானைகள்

Published On 2023-08-08 09:09 GMT   |   Update On 2023-08-08 09:09 GMT
  • பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு செல்போனில் எடுத்த வீடிேயா சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
  • வனத்துறையினா் யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், காட்டெருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் வனத்தையொட்டி கிராம பகுதிகளுக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து இதுபோன்று யானைகள் குடியிருப்புக்குள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

கூடலூர் அருகே தேவா்சோலை பஜாரை அடுத்து தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பின்புறம் வனப்பகுதி உள்ளது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் அருகே 2 காட்டு யானைகள் வந்தன.

சிறிது நேரம் 2 யானைகளும் அங்குமிங்கும் சுற்றி கொண்டிருந்தன. திடீரென 2 யானைகளும் நேருக்கு நேர் நின்று கொண்டு ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. தொடர்ந்து சில மணி நேரங்கள் இந்த சண்டை நீடித்தது.

இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரியசூண்டி பகுதிக்குள் சம்பவத்தன்று இரவு ஒற்றை காட்டு யானை நுழைந்தது. தொடா்ந்து, அப்பகுதியில் உலவிய யானை அங்கிருந்த ஆறுமுகம் என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது.

இதில், வீட்டுக்குள் அமா்ந்து இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த ஆறுமுகம், குடும்பத்தாா் அலறியடித்து வெளியே ஓடி வந்தனா். யானை நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் அங்கிருந்து சென்று அருகே உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News