சங்கரன்கோவில் தொகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்- அமைச்சரிடம் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
- சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது
- கேரளா மாநிலத்தில் வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றி நீக்கப்பட்டது.
அமைச்சர் மதிவேந்தனை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் உள்ளதாகவும், காட்டுப்பன்றிகள் தொடர்ந்து விவசாய நிலங்களை பெரும் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது எனவும், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் இதை வலியுறுத்தி காட்டு பன்றிகளை வன பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அப்போது இருந்த வனத்துறை அமைச்சர் நீக்கி தருவதாகவும் கூறி இருந்தார்.
அருகிலுள்ள கேரளா மாநிலத்தில் வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றி நீக்கப்பட்டது போல தமிழகத்திலும் வனவிலங்கு பட்டியலில் காட்டு பன்றியை நீக்க முதல்வரிடமும் வலியுறுத்தி அதை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். வாசுதேவநல்லூர் பகுதியில் ஆடு-மாடு மேய்ச்சலுக்கு குறிப்பிட்ட நேரம் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.