சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
- கொள்ளிடத்தில் 107 மி. மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
- பூம்புகார் பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
சீர்காழி:
வடகிழக்கு பருவமழை மூன்றாவது சுற்று தொடங்கியுள்ள நிலையில், கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி மயிலாடு துறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெ ண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் லேசான வெயிலும் விட்டு,விட்டு சாரல் மழையும் பெய்து வந்த நிலையில், இரவு பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் சீர்காழி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் இருந்ததால் மின்தடை ஏற்பட்டது. மழை விட்டு பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சீரமைத்து ஒவ்வொரு பகுதியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது நள்ளிரவு வரை பரவலாக இடி மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்தது. இன்று காலை வரை சீர்காழியில் 67 மில்லி மீட்டரும், கொள்ளிடத்தில் 107 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக 312 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கனமழை காரணமாக நேற்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர். ராஜேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதனால் பழையாறு திருமுலைவாசல் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.