உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 2-வது நாளாக பரவலாக பெய்த மழை

Published On 2022-06-07 14:44 IST   |   Update On 2022-06-07 14:44:00 IST
  • ஈரோட்டில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
  • அதிகபட்சமாக நம்பியூரில் 61 மி.மீ பதிவானது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் இடியுடன் கனமழை பெய்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மழைநீரால் நிரம்பியது.

மேலும் பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. ஈரோடு வ.உ.சி. காய்கறிகள் மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதேப்போல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூர் பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, வரட்டுப்பள்ளம், கொடுமுடி, கொடிவேரி போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையால் வெப்பமான சூழ்நிலை மாறி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

நம்பியூர்-61, பெருந்துறை-37, சென்னிமலை-35, சத்தியமங்கலம்-16, மொடக்குறிச்சி-11, கொடுமுடி-8.2, கொடிவேரி-8, கோபி-7.6, குண்டேரிபள்ளம்-6.4, கவுந்தப்பாடி-6.4, ஈரோடு-5, அம்மாபேட்டை-1.2.

Tags:    

Similar News